சென்னை: தமிழகத்தில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற கொள்கையோடு ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் அண்ணாமலை. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது பதவி ராஜினாமா கடிதத்தை டெல்லியில், பாஜ தலைவர்களை சந்தித்து அளித்தார். இந்நிலையில் இன்று காலை அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்று கொண்டார். இதுதொடர்பாக பாஜ தேசிய பொதுச் செயலாளர் மற்றும் தலைமையக பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்று கொண்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற கொள்கையோடு ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கவுள்ளதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலைதள நேரலையின் வாயிலாக அவர் இந்த முக்கிய முடிவை வெளியிட்டுள்ளார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 2020 பிஜேபியில் டெல்லியில் இணைய வரும்போது சூப்பர் ஸ்டார் ரஜினி, போன் செய்தார். எனக்கும் அவருக்குமான நட்பு, நான் பதவியில் இருந்து வந்தபிறகு ஒரு நட்பு. நிறைய பேசினேன். அவரின் அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் பேசியிருக்கிறேன். அப்போது ரஜினிகாந்த், ‘நீங்கள் டெல்லியில் இருந்து வர வேண்டும்.
எங்கள் இயக்கத்தில் இணைய வேண்டும்’ என பாஜவில் இணைவதற்கு முன்பு அழைப்பு விடுத்தார். பிஜேபியில் சேருவதற்கு முன்பாக 3 விசயம்தான் என் முன் நின்றது. தமிழ்நாட்டிற்கு எது நல்லது. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவதுதான் நல்லது, பின்னர் அவர், வராமல் இருப்பதுதான் நல்லது என தோன்றியது. ஏனென்றால் கோவிட் காலத்தில் அவருக்கு உடல் பிரச்னை ஏற்பட்டது. அவர் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிஜேபியில் இணைவதை பி.எல்.சந்தோஷ்க்கு வாக்குறுதியாக கொடுத்தேன். அதனால்தான் ரஜினிகாந்த் அழைத்தபோது என்னால் வரமுடியாது என்று சொல்லி பாஜவில் இணைத்து கொண்டேன். அதன் பிறகு ரஜினிகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்டேன்.
கடந்த 2020 ஆகஸ்ட் 25 அன்று டெல்லியில் எந்த இடத்தில் பாஜவில் இணைந்தேனோ, அதே இடத்தில் இருந்து இப்போது மிக பண்போடு, மரியாதையோடும் விடைபெறுகிறேன். இது கடந்த 18 மாதங்களாக கட்சி தலைமையுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவு. கடந்த டிசம்பர் மாதமே என் முடிவை தெரிவித்துவிட்டேன். தேர்தல் பணிகளை முடித்துவிட்டு மே இறுதியில் விலகுவதாக கூறியிருந்தபடி, இப்போது விலகுகிறேன். அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து, நாகரிகமான முறையில் விடைபெற்று வந்துள்ளேன். “இன்றிலிருந்து ஒரு புதிய பாதை, புதிய பரிமாணத்தோடு நம்முடைய அரசியல் இயக்கம் தொடங்குகிறது.
இதற்காக www.wetheleaders.org என்ற அமைப்பின் மூலம், மக்கள் தங்களை தாங்களாக இணைத்து கொள்ளலாம். இது வெறும் இயக்கம் மட்டுமல்ல, வரும் தமிழக பொதுத்தேர்தலில் (சட்டமன்றத் தேர்தல்) இந்த இயக்கம் புதிய கட்சியாக மாறி தரம் பிரித்து பார்த்து போட்டியிடும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அரசியலில் தூய்மையையும், நேர்மையையும் கொண்டு வர கோவையில், ‘ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்’ என்ற பயிற்சி மையம் தொடங்கப்படும். உள்ளாட்சி தேர்தல் முதல் சட்டமன்ற தேர்தல் வரை இதில் போட்டியிட விரும்பும் புதிய தலைவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் இங்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களாக மக்கள் முன்னாடி நிறுத்தப்படுவார்கள்.
“தமிழக அரசியலில் இருக்கும் ‘கல்ட் பாலிடிக்ஸ்’ எனப்படும் தனிநபர் வழிபாட்டு கலாச்சாரத்தை உடைக்க வேண்டும். இதனால்தான் என் பிறந்தநாளைகூட நான் கொண்டாடுவதில்லை. அரசியல் என்பது ஒரு குடும்பத்திற்கானதோ அல்லது நிரந்தரமானவர்களுக்கானதோ அல்ல. நம் இயக்கத்தில் ‘டேர்ம் லிமிட்’ கொண்டு வரப்படும். யாரும் எப்போதும் நிரந்தர எம்.எல்.ஏ, எம்.பி அல்லது அமைச்சர் கிடையாது. இந்த விதி எனக்கும் பொருந்தும். நான் என்றும் இந்தியன் என்ற அடையாளத்தோடு வாழும் பெருமைமிகு தமிழன். மேகதாது அணை பிரச்சனை, டங்ஸ்டன், மீத்தேன், நிலக்கரி என தமிழக உரிமைகள் சார்ந்த எந்தவொரு விஷயத்திலும் நான் சமரசம் செய்து கொண்டதே இல்லை; இனிமேலும் செய்ய மாட்டேன். பிரதமர் மோடி மீது என்றும் எனக்கு பெருமதிப்பு உண்டு.
ஆனால், அண்மையில் கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கைக்கான கால அட்டவணை மாற்றம் போன்ற சில கொள்கைகளில் பாஜவுடன் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அதை கம்பீரமாக எதிர்ப்பேன். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. திமுக, அதிமுக, தவெக, சீமான் என அனைவரையும் அரசியல் கட்சிகளாகவே பார்க்கிறேன்; யார் மீதும் வன்மம் இல்லை. சமூக வலைதளங்களில் என் ஆதரவாளர்கள் ஆபாசமாகவோ, வன்மமாகவோ பேச வேண்டாம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு நேரம் எடுக்கும். அதுபோல புதிய தலைவர்களை உருவாக்க பொறுமை தேவை. நமது கொள்கை ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்பதுதான். பாரத நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தைக் கொண்டு வருவதே நமது ஒரே குறிக்கோள்.
அடுத்த ஆனந்தமாக, அன்போடு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் இயக்கத்தை நாம் துவங்க இருக்கின்றோம். இது அரசியல் இயக்கமா, கட்சி இல்லையா அப்படி என்று நீங்க யாரும் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக தமிழகத்தில் அடுத்து நடக்கக்கூடிய பொதுத்தேர்தலில் நம்முடைய கட்சி போட்டியிடும், எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்கு தயாராக வேண்டும். நிறைய தலைவர்களை தயார் செய்ய வேண்டும். நிறைய கேடர்ஸ், தன்னார்வலர்கள் தயார் பண்ணனும். உத்வேகத்தோடு தயார் பண்ணனும். அவங்களுக்கு அந்த திறமையை உருவாக்கி கொடுக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரமாகும். நாம் அது ஒரு இயக்கமாக ஆரம்பித்து அரசியலை சொல்லி கொடுத்து, அனைத்து தரப்பினரையும் உள்ளே கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
