நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகேயுள்ள மேலபுத்தனேரி காந்திநகரைச் சேர்ந்தவர் வேணு ஆகாஷ் (24). இவர் பாளையிலுள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை கேடிசி நகர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் உள்ள பாரில் வேணு ஆகாஷ் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து மர்ம நபர் கையிலிருந்த மது பாட்டிலால் திடீரென வேணு ஆகாஷின் வயிறு, நெஞ்சு பகுதியில் குத்தி கீழே தள்ளினார். பின்னர் அங்கே கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்டார். இதனையடுத்து வேணு ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து மர்மநபர் தப்பி ஓடி விட்டார். சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
* பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தையை கொன்ற மகன் கைது
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (எ) மகேஷ் (43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு மகாராஜன் (18) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகாராஜன் 9ம் வகுப்பு படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மகன் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதை அவ்வப்போது தந்தை கண்டித்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாயாண்டி வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகாராஜன் இரும்புக் கம்பியால் மாயாண்டி தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து மகாராஜனை கைது செய்தனர். கொலையை மறைத்ததற்காக மனைவி உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
