குன்னூரில் தொழில் கடன் பெற்று தருவதாகக் கூறி மகளிருக்கு பாலியல் தொல்லை முன்னாள் ராணுவ வீரர் கைது: உடந்தையாக இருந்த 2 பெண்களுக்கு வலை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் ​குன்னூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக ஊட்டச்சத்து உணவுகளை விற்பனை செய்யும் சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். இவருடன் 25க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது குழுவிற்கு கோத்தகிரியைச் சேர்ந்த ஸ்ரீராம் (48) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் என்று கூறிய அவர், சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிகள் மூலம் எளிதாகத் தொழில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு முன்பணமாக நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கியுள்ளார். ஆனால் யாருக்கும் கடனுதவி பெற்றுத் தராமல் இழுத்தடித்ததோடு அந்தப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே, இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த 6 மாதங்களாக ஸ்ரீராம் அந்தப் பெண்களுக்குப் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர்களின் சுயதொழிலை முடக்கும் நோக்கில், நிறுவனத்தின் ஆவணங்களைத் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பியுள்ளார். இதற்கு 2 பெண்களும் உடந்தையாக இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் செல்போனில் கேட்டபோது, ​‘எனது ஆசைக்கு இணங்காவிட்டால் முன் பணத்தைத் தர மாட்டேன்.

எந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னிடம் ராணுவ அதிகாரமும், அரசியல் செல்வாக்கும் உள்ளது’’ எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ​இதுபற்றி குன்னூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின்படி போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

* 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட ஓட்டல் அதிபர்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் குத்தூஸ் மொய்தீன் (30). இவர் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், திருப்பூர் பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பக்ரீத் பண்டிகைக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் அனைவரும் சேர்ந்து பாடலுக்கு டான்ஸ் ஆடியதாக தெரிகிறது. அங்கு பாடலுக்கு நடனமாடிய 16 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதை அவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு குத்தூஸ் மொய்தீன் அனுப்பியுள்ளார். இவர் அனுப்பிய வீடியோவை சிறுமியின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், மகளிர் போலீசார் குத்தூஸ் மொய்தீனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

* மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண், சிறிது மனவளர்ச்சி குன்றி இருந்தார். இவருக்கும், பக்கத்து கிராமமான 28 வயது வாலிபருக்கும் கடந்த 2022ல் திருமணம் நடைபெற்றது. திருமணமான 6 மாதத்திற்கு பின், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இளம்பெண், தந்தை வீட்டில் தங்கி ஆடுகளை மேய்த்து ஜீவனம் செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக இளம்பெண்ணின் வயிறு பெரிதாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது அண்ணன், அண்ணி ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில், இளம்பெண் சக்தி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், இளம்பெண் ஆடுகளை மேய்ச்சலுக்காக அரசு புறம்போக்கு நிலங்களுக்கு காலையில் ஓட்டிச்செல்லும்போது, பக்கத்து கிராமமான மிட்டப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமியும் (60) ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து வருவார். அப்போது அவர் இளம்பெண்ணிடம் பேசி பழகி பலாத்காரம் செய்ததில்4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கோவிந்தசாமியை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: