திருவண்ணாமலையில் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சம்பவம் மேலும் ஒருவர் கைது; 2 பேரை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதில் மேலும் 3 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் திரு வண்ணாமலையில் பதுங்கியிருந்த விண்ண வனூர் கிராமத்தை சேர்ந்த அருள்பாண்டியன்(23) என்பவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மேலும் இருவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ரூரல் டிஎஸ்பி ராஜா தலைமையிலான 5 தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரில், முக்கிய குற்றவாளியான வாசு என்கிற வாசுதேவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

* ஆபாச வீடியோ எடுத்து கூகுள் பே மூலம் பணம் பறிப்பு
திருவண்ணாமலைக்கு இரவு நேரத்தில் தனியாக அல்லது ஆண் நண்பர்களுடன் வரும் இளம் பெண்களை குறிவைத்து, இந்த கும்பல், ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி, அணிந்திருக்கும் நகை மற்றும் பணத்தை அபகரிப்பதுடன், ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிடுவதாக சொல்லி தொடர்ந்து பணத்தை கூகுள் பே மூலம் பல பெண்களிடம் அபகரித்துள்ளதாகவும் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Related Stories: