செல்போனில் ஆபாச படம் காட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது

காரைக்குடி: காரைக்குடியில் செல்போனில் ஆபாச படம் காட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஒரு சமூகத்துக்கு சொந்தமான கோயில் வீடு உள்ளது. இந்த வீட்டில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி சாமி கும்பிடுவது வழக்கம். மற்ற நாட்களில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (62), பகலில் மட்டும் வந்து கோயில் கணக்கு வழக்குகளை பார்த்து வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 12 வயது மகளுடன் 2020 முதல் கோயில் வீட்டில் தங்கி, அதை பாதுகாத்தும் பராமரித்தும் வந்தனர். பகலில் தம்பதி வெளியில் வேலைக்கு சென்றுள்ளனர். இவர்களது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். பகலில் கோயில் வீட்டிற்கு வரும் சுப்பிரமணியன், சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே செல்லும் நேரத்தில், தனது செல்போனில் ஆபாச படங்கள் காண்பித்தும், தின்பண்டங்களை வாங்கி கொடுத்தும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். 3 ஆண்டுகளாக இச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், அவரது பெற்றோர் மகளின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த பிரச்னையால் கடந்த 2023ல் தம்பதி, மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

கோயில் வீட்டில் தம்பதியை தங்க வைத்த முருகப்பன் என்பவர், சமீபத்தில் அவர்களை சந்தித்தார். ‘‘ஏன் என்னிடம் எதுவும் கூறாமல் வேலையை விட்டு நின்று விட்டீர்கள்’’ என்று கேட்டுள்ளார். அப்போது, தங்களது மகளுக்கு கணக்குப்பிள்ளை சுப்பிரமணியன் 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்தது குறித்து தெரிவித்தனர்.

இதையடுத்து, முருகப்பன் மூலம் சிறுமியின் பெற்றோர், காரைக்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதையடுத்து சுப்பிரமணியனை போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

* பஸ்சில் பெண்ணை வீடியோ எடுத்த 2 பேர் சிக்கினர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண், காரைக்குடி நகரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண், அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த 2 பேர், இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த இளம்பெண் அவர்களை கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டிரைவர், பஸ்சை பள்ளத்தூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தினார். போலீசார் விசாரணையில், இளம்பெண்ணை வீடியோ எடுத்து தகராறு செய்தது ராங்கியத்தை சேர்ந்த கிருஷ்ணன் (54), அடைக்கப்பன் (58) ஆகியோர் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: