×

மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்றக் கோரி, ராம.ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல் துறை ஆகியோர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே நேரம், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கோயில் செயல் அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அவமதிப்பு வழக்குகளையும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். பிரதான வழக்கில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது’’ என்றனர். அப்போது அரசு தரப்பில், இது தொடர்பாக அரசிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர், ‘‘தற்போதைய தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எனவே கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை’’ என்றார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu government ,Thiruparankundram ,Madurai ,Thiruparankundram hill ,Rama Ravikumar ,Court… ,
× RELATED சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும்...