சோழிங்கநல்லூர்: கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் மற்றும் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலின் பாரில் மது அருந்திவிட்டு நடனம் ஆடும்போது ஏற்பட்ட தகராறில் யான்சி (18) மற்றும் 17 வயது சிறுமியை ஒரு தரப்பினர் காரை ஏற்றி கொலை செய்தனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் மதுபான பாருக்கு மதுவிலக்கு இணை ஆணையர் சீல் வைத்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல், அவரது கூட்டாளிகள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருநெல்வேலியில் பதுங்கியிருந்த பாரதி (21) மற்றும் தீனா பாண்டியன் (23) ஆகிய இருவரையும் கோயம்பேடு சி.எம்.பி.டி, தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை ெகாண்டு வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தற்போது காவல் நிலையம் முழுவதும் தடுப்பு வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்து பாண்டியன், காந்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

