காங்கிரசில் ஊழல் புகார்களை விசாரிக்கும் குழு ஆலோசனை; தொண்டர்கள் முன்வைக்கும் புகார்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும்: 60 நாட்களில் மேலிடத்தில் ஒப்படைப்போம் என ஜெயக்குமார் பேட்டி

 

சென்னை: காங்கிரசில் ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்தியது, அப்போது தொண்டர்கள் முன்வைக்கும் புகார்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 60 நாட்களில் மேலிடத்தில் ஒப்படைப்போம் என்றும் குழுவின் தலைவர் ஜெயக்குமார் கூறினார். தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 23 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கட்சிக்குள் நிலவிய உட்கட்சி பூசல் மற்றும் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் ஊழல் உள்ளிட்ட புகார்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை கலங்கடிக்க செய்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகள் மற்றும் கட்சி விரோத நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு பல்வேறு நிர்வாகிகள் கடிதங்கள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைக்கப்பட்டது. இக்குழுவில் மாநில துணைத் தலைவர்கள் இதயத்துல்லா, சொர்ணா சேதுராமன், முன்னாள் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் கமலா லட்சுமி காமராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து 60 நாட்களுக்குள் மேலிடத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. அப்போது தேர்தலில் நடந்த ஊழல் புகார்கள் குறித்து எந்த வகையில் விசாரிப்பது, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குழுவின் தலைவர் முன்னாள் எம்பி ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்தின் மூலம் தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் குறித்தும், அடுத்தகட்டமாக கட்சி ரீதியாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

தொண்டர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தலைமையிடம் முறையிடுவோம். மேலும், கட்சி தலைமை எங்களுக்கு 60 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் தொண்டர்கள் முன்வைக்கும் பிரச்னைகள் மற்றும் கருத்துகளை தலைமையிடம் எடுத்துரைப்போம். எங்களின் பயணத்தின் போது தொண்டர்கள் நேரில் சந்தித்து கட்சியில் உள்ள நிறை, குறைகள் குறித்து தெரிவிக்கலாம். அனைத்து கட்சிகளிலும் உள்கட்சி பிரச்னைகள் இருப்பது இயல்பான ஒன்று தான். 50 ஆண்டுகள் பழமையான கட்சியிலிருந்தும், 3 ஆண்டுகள் தொடங்கிய கட்சியிலிருந்தும் இத்தகைய பிரச்னைகள் இருந்து கொண்டே தான் வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: