யாரை எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களிடமே சேர்ந்து தோள் கொடுத்து உயர்த்தியவர்களை உதைப்பது சரியாகுமா? காசிமுத்துமாணிக்கம் கண்டனம்

 

சென்னை: யாரை எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களிடமே சேர்ந்து கொண்டு, தோள் கொடுத்து உயர்த்தியவர்களை உதைப்பது சரியாகுமா என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் முடிந்தவுடன் அதில் இணைந்து வெற்றி கண்டவர்கள் கையெழுத்து மை காய்வதற்குள், சாப்பிட்ட கை ஈரம் காய்வதற்குள் நன்றி கூட சொல்லாத நிலையில், யாரை எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களிடமே சேர்ந்து கொண்டு, தோள் கொடுத்து உயர்த்தியவர்களை உதைப்பது சரியாகுமா?

தேர்தலுக்கு இரு மாதம் முன்பே கூட்டணியில் மாறுபட்டு பேசிக்கொண்டே அதிகம் சீட்டையும் பெற்று, ராஜ்யசபா சீட்டையும் பெற்ற காங்கிரசார் எங்கள் வருத்தத்தின் நியாயத்தை உணர்ந்து அமைதி காக்காமல், ஆறுதல் தராமல், வன்முறைச் சொற்களை வெளியிட்டால் இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு அவப்பெயர் தரும். ஒரு காலத்தில் தளபதி இல்லம் தேடி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்கள்.

வந்தவர்கள் பா.ஜ.வை எதிர்த்திட காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணிக்கு நீங்கள் வரவேண்டும் என்ற போது, வலிமையான முதல்வர்களாக அவர்கள் இருந்த போது தலைமை தாங்க அழைத்த நேரத்தில், அந்த கருத்தை மறுத்து காங்கிரசுக்கு கை கொடுத்தவர் தளபதி ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியினரே ராகுலை பிரதம வேட்பாளராக ஏற்க மறுத்தபோது ஆதரவு கரம் நீட்டியவர்.

அன்று நிதிஷ்குமார் ஜெயித்தவுடன் கூட்டணியை மாற்றிக் கொண்டதால் சந்தர்ப்பவாதம் என்றீர்கள். இப்போது மணிக்கணக்கு இடைவெளியில் மனம் மாறிய செயலுக்கு என்ன பெயர் சந்தர்ப்பவாதமா, பக்கவாதமா? பக்கத்தில் இருக்கும் புதுச்சேரியில் பார்ப்போம். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, காங்கிரசுக்கு கடந்த தேர்தலில் இரண்டு சீட், இந்த முறை 22 இடத்தில் நின்றும் ஒரே ஒரு சீட்தான் வென்றது.

திமுகவோ 5 சீட்டுகளை பெற்றுள்ளது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தனி ஆட்சி தான் என்று கூறிவிட்டு தி.மு.க.வுக்கு கொடுத்த இடத்தில் கை சின்னத்தோடு ராகுலுடன் இணைந்து எடுத்த புகைப்படத்துடன் நின்று என்ன பிரயோஜனம்? இறுதியில் ஒரே ஒரு சீட்டுதான் காங்கிரஸ் பெற்றது. காங்கிரசின் துரோக அரசியலுக்கு புதுச்சேரி மக்கள் பாடம் கற்பித்தும், திருந்தாதவர்களை என்ன செய்வது? காங்கிரசின் புச்சேரி முதல்வர் வேட்பாளர் வைத்தியலிங்கம். இவர் முன்னாள் முதல்வர், முன்னாள் எம்பி. இந்த முறை தனது தொகுதியில் நான்காவது இடத்திற்கு சென்றதுடன், தனது டெபாசிட் தொகையும் இழந்தார்.

1967க்கு பிறகு தி.மு.க -அ.தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் கூட்டணி கட்சியினருக்கு பங்கு தரவில்லை என்கிறார்கள். இப்போது விஜய் மெஜாரிட்டி வந்து தோழமைகளுக்கு தரவில்லை. எதிரணியிலிருந்து குதிரை பேரம் பேசித்தான் ஆட்சியையே பாதுகாக்க முடிகிறது என்பதால் கொடுத்தார். 1967ல் கூட தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 71ல் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு ஒன்றியத்தில் பங்கு கொடுத்ததா? 1994ல் கர்நாடகாவில் அ.தி.மு.க.வின் பக்தவச்சலம் வென்ற போது காங்கிரஸ், அ.தி.மு.க.விற்கு கூட்டணி ஆட்சியில் பங்கு தந்ததா? முனியப்பா எம்.எல்.ஏ. ஆக 1999-ல் வென்றார். ஆட்சியில் பங்கு கொடுத்ததா காங்கிரஸ்?

காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியை தான் மக்கள் விரும்பி ஆதரவளித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் என்று ராஜேஷ்குமார் கூறுகிறார். 1996ல் காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? 2014ல் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்றார்களா? இதற்காகத்தான் 2016 தேர்தலில் ஜெயலலிதா யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரலாம். ஆனால் எல்லோரும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று கூறினார். அதனால் தான் முதன் முறையாக தமிழ் மாநில காங்கிஸ் கூட இரட்டை இலை சின்னத்தில் நின்றது. 234 தொகுதியிலும் இரட்டை நிலை நின்றது. 13 நாளில் தனக்கு மெஜாரிட்டி இல்லை என ராஜினாமா செய்தவர் வாஜ்பாய்.

13 மாதத்தில் என் ஆட்சிக்கு ஆதரவு இல்லை ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்தவர் வாஜ்பாய், நேர்மையாக தேர்தலை சந்தித்தவன் சங்கி என்றால், எதிர்கட்சிகளை இழுப்பது, எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைப்பது குறுக்கு வழியில் குதிரை ஆட்சி நடத்துபவரை எப்படி அழைப்பது? சொங்கி என்றா? நாச சக்தி என்றா? விஜய் தனக்கு ஆதரவு இல்லை எனில், கவுரவமாக ராஜினாமா செய்து விட்டு, ஒதுங்கி கொள்வதோ அல்லது மீண்டும் தேர்தலை சந்திப்பதோதான் ஜனநாயகம். எத்தனை கட்சிகள் பிரிந்தாலும் இந்த ஆட்சி சென்று, தளபதி வரும் காலம் வசந்த காலம், கண்டிப்பாக மலர்ந்தே தீரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: