டெல்லியில் மேலிட தலைவர்களுடன் 7 மணி நேரம் ஆலோசனை: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா? மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி

 

பெங்களூரு: கர்நாடகாவில் 2023ம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, இரண்டரை ஆண்டுகளில் டி.கே.சிவகுமாரை முதல்வராக்குவதாக எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், சித்தராமையா அப்போது முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்போதிலிருந்தே டி.கே.சிவகுமார் முதல்வர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். தனது ஆதரவாளர்களின் மூலம் கட்சி மேலிடத்திற்கு அதற்கான அழுத்தத்தை கொடுத்துவருகிறார்.

மேலிடம் இவ்விவகாரத்தில் முடிவெடுக்காமல் தொடர்ந்து தாமதப்படுத்திவந்த நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் டெல்லி சென்றனர். டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி ஆகியோர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம், மேலவை தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக மாநிலத்தில் நிலவும் முதல்வர் மாற்ற சர்ச்சை குறித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதல்வர் சித்தராமையாவுடன் ராகுல் காந்தி தனியாக சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மாற்றம் குறித்து சித்தராமையாவுடன் ராகுல் காந்தி பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த அந்த விவாதத்தில் தலைமை மாற்றம் குறித்தும், சித்தராமையாவை மாநிலங்களவை எம்.பி ஆக்குவதாகவும் பேசப்பட்டதாகத் தெரிகிறது. சித்தராமையாவின் மகன் யதீந்திராவிற்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாகவும் ராகுல் காந்தி கூறியதாகத் தெரிகிறது. ஆனால் ராகுல் காந்தியின் முன்மொழிவுகள் எதற்கும் தெளிவான முடிவைத் தெரிவிக்காமல் சித்தராமையா மவுனமாகவும், சலிப்புடனும், அதிருப்தியுடனும் இருந்திருக்கிறார்.

நான் முதல்வர் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைக்குச் சென்றால், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று சித்தராமையா, ராகுல் காந்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, அதுகுறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று கூறியதாகவும் தெரிகிறது. முதல்வர் மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையையடுத்து, சித்தராமையா எந்த பதிலுமே தெரிவிக்காமல், கூட்டம் முடிந்த உடனேயே இந்திரா பவனில் இருந்து வெளியேறி தனது ஆதரவாளர்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு நேராகச் சென்றார். மாநில அரசியலில் நிலவிய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லியில் நடந்த முதல்வர் மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளும், சித்தராமையாவின் அதிருப்தியும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இது தேர்தல் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் மட்டுமே தவிர, ஊடகங்களில் தற்போது வெளிவரும் யூகங்கள் அனைத்தும் வெறும் யூகங்களே. அவற்றில் எந்த உண்மை இல்லை என்றார்.

Related Stories: