×

தூய்மையான ஆட்சியை தருவோம் என கூறி விட்டு குதிரை பேரத்தில் தவெக அரசு ஈடுபடுகிறது: சபாநாயகரை நேரில் சந்தித்த பின்னர் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

 

சென்னை: தூய்மையான ஆட்சியை தருவோம் என கூறி விட்டு குதிரை பேரத்தில் தவெக அரசு ஈடுபடுகிறது என்று சபாநாயகரை நேரில் சந்தித்த பின்னர் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) ஆகிய 3 பேரும் தங்களின் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு ஆதரவு அளித்த 3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று எடப்பாடி அணியினர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் இன்று நேரில் முறையிட்டனர்.

தொடர்ந்து எடப்பாடி அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி: தவெக அரசின் நம்பிக்கை தீர்மானத்தின் போது அதிமுக எம்எல்ஏக்களை எதிர்த்து வாக்களிக்க எடப்பாடி உத்தரவிட்டார். ஆனால் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேர் மீது கட்சித் தாவல் சட்ட நடவடிக்கை எடுக்க பேரவை தலைவரிடம் மனு அளித்தோம். அந்த கடிதம் ஆய்வில் உள்ளதாக பேரவை தலைவர் தெரிவித்தார். இந்நிலையில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருக்கும் நிலையில், அது ஆய்வில் உள்ளது. அப்படியிருக்கும் போது அவர்கள் பதவி ராஜினாமா செய்வதை ஏற்றுக் கொண்டது விதிகளுக்கு முரணானது.

ராஜினாமா கொடுத்த 5 நிமிடத்தில் மூவருக்கும் லேமினேஷன் செய்யப்பட்ட உறுப்பினர் கார்டுகள் வழங்கப்படுகிறது. இது தலைமை செயலகமா அல்லது தவெக கட்சியின் தலைமை அலுவலகமா என கேள்வி எழுகிறது. இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஊக்குவிப்பதால் குதிரை பேரம், குதிரை வேகம் அளவுக்கு நடைபெறுகிறது. இதை தடுத்து நிறுத்த அரசு முன்வரவேண்டும். தூய்மையான ஆட்சியை தருவோம் என கூறிய அரசு முறை தவறி பின்வாசல் வழியாக ஆட்சியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக குதிரை பேரத்தை நடத்தி கொண்டிருக்கிறது.

ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் இதுதான் உண்மை. ராஜினாமா செய்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிட்டாலும் அதை திரும்ப பெறும் அதிகாரம் பேரவை தலைவருக்கு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags : Government of Dweka ,MLA ,Agiri Krishnamoorthy ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Adimuka ,
× RELATED தவெக அரசை போல பயிர்க்கடன் தள்ளுபடியை...