மணப்பாறை: திருச்சி அருகே காவல் நிலையம் முன்பு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் விஏஓ சரவணன். இவரும், மண் ஒப்பந்ததாரரின் மகனும் விஏஓ அலுவலகத்தில் இருந்தபடி பேசும் உரையாடல் விவரம் வருமாறு:
விஏஓ: ஒரு 20,000 ரூபாவாச்சும் பாருங்க.. நீங்க எத்தனை மண் குவியல் பண்றீங்கன்னு தெரியும். நான் கொஞ்சம் விரட்டி இருந்தா, நீங்க எவ்வளவு செலவு பண்ணி இருப்பீங்கன்னு தெரியும். உங்களுக்கு உதவி பண்ணலாம்னு தான் பார்க்கிறேன். நீங்க வெறும் 5,000 ரூபாய் தர்றீங்க… நான் பட்டாவுக்கே 5,000 ரூபாய் வாங்குறேன்.
ஒப்பந்ததாரரின் மகன்: நீங்க பஸ்ட் 50,000 ரூபாய் கேட்டீங்க.. பேசிக்கலாம் அப்படின்னு சொன்னீங்க…ரெகுலரா ஓட்டுனா பிரச்னை இல்ல, இது எப்பயாச்சும் தான் எடுக்குறோம். இது பர்மிட் இருக்கு, இப்ப எவ்வளவு கொடுக்கணும். விஏஓ: இனிமே மாசா மாசம் பாத்துக்கிறேன். இப்ப புடிச்சதுக்கு மட்டும் ஏதாவது பார்த்து செய்ங்கன்னு சொல்றேன். ஏத்துக்கிற அளவு அமௌன்ட்னா நானே பாத்துக்குவேன் எனக்கும் சிக்கல் வரக்கூடாதில்ல. இவ்வாறு விஏஓ பேரம் பேசுகின்றார். அலுவலகத்தில் வைத்து பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல விஏஓ சரவணன் ஒப்பந்ததாரர் நாகராஜிடம் செல்போனில் பேசும் ஆடியோ உரையாடல் விவரம் வருமாறு: விஏஓ: ஆமா சார் உங்க பையன் வந்துட்டு போனாப்டி, சரி ஓகே சொல்லி இருக்கேன். பார்த்துக்கோங்க சார். அதாவது ஓடும் போது கொஞ்சம் தகவல் கொடுங்க சார். எல்லாரும் ரவுண்ட்ஸ்ல தான் இருக்காங்க நைட்டும், பகலும். அப்புறம் எனக்கு பிரச்சனை வந்துரும் சார். நம்ம வந்து உங்கள பண்ண வேணாம்னு சொல்லல நம்ம என்ன நெளிவு சுழிவோ அதை பாத்துக்கலாம் சார்.
ஒப்பந்ததாரர்: இது பர்மிட் போட்டு ஓட்டுனது, இப்போ ஓட்டினது கிடையாது, எலக்சனுக்கு முன்னாடி ஓட்டுனது. விஏஓ: நான் என்னன்னு பார்த்து செஞ்சு தரேன். இதுல பிரச்னை எல்லாம் ஒன்னும் பெருசாக்க நான் விரும்பல. நீங்க இத மட்டும் என்னனு கொஞ்சம் பாருங்க. மேற்கொண்டு நீங்க பண்ணும் போது மட்டும் ஒரு தகவல் கொடுங்க. கம்ப்ளைன்ட் வந்து நம்ம இந்த இடத்துக்கு வந்திருக்கோம். அதனால நம்ம வீடியோ எடுத்து போட்டோ அட்டாச் பண்ணி தான் கொடுக்கணும். அதனாலதான் பண்ணுனே. மேலையும் நான் சொல்லி இருக்கேன் சார். தம்பி என்கிட்ட முடிச்சு இருந்தா இவ்ளோ தூரம் போயிருக்காது. இவ்வாறு அந்த ஆடியோ உரையாடல் முடிகிறது.
இதனைத்தொடர்ந்து விஏஓ அலுவலகம் பின்புறம் உள்ள புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பே ரூ.20 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளும் வீடியோ காட்சியும் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* ‘மேலிடத்துக்கு கொடுக்கணும்’ ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ராணிப்பேட்டை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் சீனிவாச ராவ். இவர் நேற்று முன்தினம் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு மாற்றாக, விழுப்புரம் மாவட்டத்தின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ஆறுமுகம் நயினார், நேற்று கூடுதலாக ராணிப்பேட்டை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு கல்குவாரி உரிமையாளரிடம் மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி உதவி இயக்குனர் சீனிவாச ராவ், ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் விசாரணை நடந்து வரும் நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பான தகவல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
