செல்போன் மாய உலகில் மக்கள் மயங்கி விட்டனர் விஜய் கட்சிக்கு வாக்களித்தோர் தற்போது மனம் வருந்துகின்றனர்: ராஜேந்திர பாலாஜி தடாலடி

 

விருதுநகர்: தேர்தலுக்கு கடைசி நான்கு நாட்களில் ஒரு மாய உலகில் செல்போன் மூலம் மக்கள் மயங்கி விட்டார்கள். விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போது மனம் வருந்துவதாக அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகரில் அதிமுக மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தவெக வெற்றி சுனாமி போன்றது. எனவே இது நிலையானதல்ல. அதிகாரத்தில் இருந்தால்தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படும். அந்த நிலை அதிமுகவிற்கு இல்லை. தவெக தலைவர் விஜய் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இல்லாமல் வந்திருக்கிறார். ஒரு நட்சத்திர நடிகரின் மாயையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று தெரியாமலே வாக்குகள் அவர்களுக்கு விழுந்திருக்கின்றன.

தவெக கட்சியில் வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்க முடியும்? தேர்தலுக்கு கடைசி நான்கு நாட்களில் ஒரு மாய உலகில் செல்போன் மூலம் மக்கள் மயங்கி விட்டார்கள். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வாக்குகளை பெறுவதை வெளிநாடுகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்.

தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது. விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போது மனம் வருந்தும் செயல்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக வந்திருப்பது காலம் தந்த கொடை. கட்சியில் ஏற்பட்டிருக்கும் விரிசல்களை கட்சி தலைமை பார்த்து கொள்ளும். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள்.

வாக்காளர்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். மக்கள் அதிமுகவை எளிதில் கைவிட மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேர்தல் சுனாமியில் சிக்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன். திமுகவின் வாக்குகள் அக்கட்சிக்கே கிடைத்துள்ளது. விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக, பாஜ வாக்குகளே. இவ்வாறு கூறினார்.

Related Stories: