அதிருப்தி அதிமுக-வினரை அமைச்சர்களாக்கினால்…! மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அதிமுக எம்.பி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 1 வாரத்திற்கும் மேல் கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை முதலமைச்சர் மற்றும் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்று கொண்டுள்ளனர். இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், தங்களை ஆதரிக்கும் பிளவு அதிமுக-வை சேர்ந்த சீனியர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை ஒதுக்க தவெக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அதிருப்தி அதிமுக-வினரை தமிழக அமைச்சரவையில் இடம்பெற செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரத்தில் மணிப்பூர் அமைச்சர் பதவி நீக்கத்தை சுட்டிக்காட்டி அதிமுக எம்.பி இன்பதுரை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். எம்.பி இன்பதுரை தனது சமீபத்திய அறிக்கையில், “கட்சி தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் தருகிறது.அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன் Article 163 – ன் படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்!

விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் Article 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்சநீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்! மணிப்பூர் மாநில அமைச்சர் தோனோஜம் ஷியாம்குமார் சிங் (Thounaojam Shyamkumar Singh) வழக்கில் 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம்! ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும்! இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும்!” என்று கூறி பிளவு அதிமுக-வில் உள்ளவர்கள் அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு சென்றால் என்ன நடக்கும் என்பதை கூறி அதிமுக எம்.பி இன்பதுரை எச்சரித்துள்ளார்.

Related Stories: