எந்த ஜென்மத்திலும் சி.வி.சண்முகம் அதிமுகவிற்கு தலைமை ஏற்க முடியாது: நிர்வாகிகள் ஆவேசம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிவி.சண்முகத்திற்கு எதிராக கடும் ஆவேசத்துடன் பேசினர். தமிழகத்தில் புதியதாக பதவியேற்ற தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி சிவி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து 25 எம்எல்ஏக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். மேலும், அவர்கள் வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கிவிட்டு, புதியதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதுபோல், விழுப்புரம் அதிமுகவில் சிவி.சண்முகம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார். அவர் கட்சி அலுவலகத்திற்கு சென்ற போது சிவி.சண்முகம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், போலீஸ் தரப்பில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது. இதனிடையே அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்ய கோட்டாட்சியர் முருகேசன், இரு அணிகளுக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். சிவி சண்முகம் தரப்பில் குணா என்பவருக்கும், இபிஎஸ் தரப்பில் மாவட்ட செயலாளர் பசுபதிக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் நாளை(18ம் தேதி) 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆஜராக வேண்டும், அதில் பேசி முடிவு செய்யப்படும் என்றும், அதுவரை அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில், புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் முன்னாள் எம்பி சேவல் ஏழுமலை, வானூர் முன்னாள் எம்எல்ஏ சக்கரபாணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாவட்ட செயலாளர் பசுபதி, சி.வி சண்முகம், ராதாகிருஷ்ணன் ஆகியோரால் நசுக்கப்பட்டு நான் வெளியேற்றப்பட்ட போது கூட நான் அதிமுகவில் தான் இருப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். எனக்கு தவெகவிலிருந்து அமைச்சர் பதவி கொடுப்பேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் ஏற்கவில்லை.

சத்தியமாக சொல்கிறேன் ஜெ, எம்ஜிஆர் ஆன்மா இருக்கிறது. சிவி சண்முகம் நடுத்தெருவில் தான் நிற்பார். மந்திரியாகவே மாட்டார். இந்த மாவட்டத்தில் இருக்கிறவர்களிடம் சொல்லி இருக்கிறார். இனிமேல் அதிமுக வேலைக்குஆகாது, மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது. இனி தவெக தான். உங்களை சேர்மன் ஆக்கி விடுவேன். பதவி பெற்று தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் சிவி சண்முகம் என்று ஆவேசமாக பேசினார். வானூர் முன்னாள் எம்எல்ஏ சக்கரபாணி பேசுகையில், இந்த மாவட்டத்திற்கு பிடித்த பீடை ஒழிந்து விட்டது. சண்முகம் மீது கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். தற்போது புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் இரட்டை தலைமை என்று கூறும் சண்முகம் வீட்டில்தான் இரட்டை தலைமை இருக்கிறது. இவர் தகுதிக்கு பெரிய இயக்கமான அதிமுகவிற்கு தலைமை தாங்க நினைக்கிறார். உன் தகுதிக்கு இந்த இடத்திற்கு வர முடியுமா…? எந்த ஜென்மத்திலும் நடக்காது என்றார்.

Related Stories: