ஜெ. படத்தை வைத்து கொண்டு கட்சியை உடைக்கிறார் செங்கோட்டையன் அதிமுகவை அழிக்க பார்க்கிறார் விஜய்: பதவி வெறியால் குதிரைபேரம் என டிடிவி.தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு: தவெகவை ஆதரித்த எம்எல்ஏக்கள் நடுரோட்டில்தான் நிற்பார்கள் என தாக்கு

 

திருச்சி: அதிமுகவை விஜய் அழிக்க பார்க்கிறார் என டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஒரு வார ஆட்சியை பற்றி உடனடியாக மதிப்பிட முடியாது. குறைந்தது மூன்று மாதங்கள் ஆகட்டும், அதன் பிறகு பார்க்கலாம்.

எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. எம்ஜிஆர் காலத்திலேயே பல சோதனைகள் வந்துள்ளன. இருந்தாலும் அதிமுக அனைத்து சோதனைகளையும் கடந்து வந்துள்ளது. அதுபோல மீண்டும் எழும். திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் இல்லை. திமுகவுடன் இணைந்து ஆட்சி என்று எடப்பாடி பேசவில்லை.

தவெக ஆட்சியை அமைப்பதற்கு முன்பே, அமமுக ஒரே சட்டமன்ற உறுப்பினரை தவெக தரப்பு தங்களிடம் இணைத்து கொண்டுள்ளது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றது அமமுக, அதிமுக கூட்டணி மற்றும் நிர்வாகிகளின் உழைப்பால் மக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்தனர்.

அவரே வந்து சேர்ந்ததாக வைத்துக்கொண்டாலும், அவரை உடனடியாக இணைத்துக்கொள்வது அரசியல் அறமா? எங்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசி ஏதோ வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது அரசியல் குதிரைப்பேரம்தான். அதிமுக ஊழல் கட்சி என்றும், பாஜ கூட்டணி என்றும் விமர்சித்தவர்கள் இன்று அதே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு மனவருத்தங்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக தவெகவை ஆதரிப்பது அறம் என்று கூறுவது எப்படி நியாயமாகும்? ஜெயலிலதா ஆட்சி வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அதிமுகவை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மேலாக அமைச்சர் பதவிக்காக ஆதரவு அளிப்பது ஜனநாயக தர்மத்திற்கு எதிரானது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்ற ஐந்து தொகுதிகளில் மக்கள் நேரடியாக தவெகவுக்கே வாக்களிக்காமல், வேறு கூட்டணிக்கு வாக்களித்திருந்தனர். அப்படியிருக்க, பின்னர் தவெகவை ஆதரிப்பது அரசியல் நியாயமா?. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எவ்வளவு நாள் இந்த ஆட்சியை தாங்கி பிடிப்பார்கள்? 6 மாதமாவது நீடிக்குமா என்பது கேள்வி. இந்த ஆட்சியின் ஆயுட்காலமே தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது.

சட்டப்படி எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அவரை அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்கள். பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தவெகவுடன் இணைந்து அமைச்சர் ஆக முயற்சிப்பது அரசியல் ரீதியாக தவறான முடிவு. தவெகவை ஆதரிப்பதை அதிமுக தொண்டர்களே ஏற்க மாட்டார்கள். அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார் விஜய். அதற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் இடம் கொடுக்க வேண்டாம்.

அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிவதற்கு சமம். அதிமுகவை அழிப்பதற்கு ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு செங்கோட்டையன் ஏஜென்டாக செயல்படுகிறார். அதிமுகவை அழிக்க துணை போகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிகாது. தவெகவை ஆதரித்த எம்எல்ஏக்கள் ரோட்டில்தான் நிற்க போகிறார்கள். பதவி வெறியால் ஒரு எம்எல்ஏவை கூட தூக்குகிறார்கள்.

தூய்மையான ஆட்சி தருவோம் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த உடனே வழக்கமான அரசியலை தொடங்கி விட்டார்கள். முன்பு மற்ற கட்சிகளை விமர்சித்த அதே செயல்களில் தற்போது ஈடுபடுகிறார்கள். ஆட்சியை வெளிப்படையாக நடத்துவோம் என்று கூறியவர்கள், இன்னும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் வீட்டுக்கு சென்று அறிக்கை விடுவது சினிமா டயலாக் அல்ல.விஜய் ‘ரீல்’ ஆட்சியில் இருந்து ‘ரியல்’ ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்

‘‘இந்த ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள சிலரை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. இன்றுகூட சமூக வலைதளங்களில் பல தகவல்களை பார்த்தேன். கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் மூலம் ஆட்சி நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆட்சி என்பது ரீலில் நடத்தப்படுவதல்ல. நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் நடத்தப்பட வேண்டியது. ரீல்களை பார்த்து நம்பி வாக்களித்த மக்கள், நிஜத்தில் ஆட்சியை பார்த்தபின் உண்மையை புரிந்துகொள்வார்கள்’’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

* சிபிஐ விசாரணை வரும்

‘‘காமராஜ் கூறும் பல விஷயங்கள் பின்னர் அவருக்கே எதிராக திரும்பும். பாண்டிச்சேரியில் அவர் பல சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசியதாக தகவல்கள் உள்ளன. அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிகிறது. அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நாளை அமைச்சராக்கப்பட்டால் காமராஜ் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று விஜய்க்கு எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்று டிடிவி கூறி உள்ளார்.

Related Stories: