சென்னை: தமிழக உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி மாநில சைபர் க்ரைம் பிரிவுக்கும் 3 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி, மாநில சைபர் க்ரைம் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் சரக டிஐஜியாக இருந்த தர்மராஜன் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் பாகர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவு பிரிவு டிஐஜியாகவும், திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் எஸ்பிசிஐடி டிஐஜியாகவும், திருவாரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த கரட் கருண் உத்தவ்ராவ் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப்பிரிவு எஸ்பியாகவும்,
தென்காசி மாவட்ட எஸ்பி மயில்வாகனன் எஸ்பிசிஐடி எஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த மதன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாகவும், க்யூ பிரிவு சிஐடி எஸ்பியாக இருந்த சண்முகம் எஸ்பிசிஐடி எஸ்பி-2 வாகவும், சென்னை மெட்ரோ மண்டல குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த மாதவன் செக்யூரிட்டி பிரிவு -2 எஸ்பியாகவும், சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாக இருந்த சிலம்பரசன் எஸ்பிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 10 காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதில் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள உளவுப்பிரிவு முற்றிலும் அனைத்து உயர் அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாக தேவி, முதல்வர் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக இருந்த டிஐஜி திருநாவுக்கரசு, உளவுத்துறை டிஐஜியாக இருந்த மகேஷ்,
சிஐடி பிரிவு டிஐஜியாக இருந்த பகலவன், உளவுப்பிரிவு எஸ்பிக்களாக இருந்த கோபி, கார்த்திக், சக்திவேல், எஸ்.சரவணன், ஸ்டீபன் ஜேசுபாதம், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கூண்டோடு மாற்றப்பட்டு தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்ட எஸ்பிக்கள் உளவுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஆவின் விஜிலென்ஸ் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
* உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் போலீஸ் அகாடமிக்கு மாற்றம்
தமிழக உள்துறை செயலாளர் உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரியாக இருந்த டிஜிபி ராஜீவ்குமார் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் பயிற்சி டிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரியாவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி செந்தில் வேலன் ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குநராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
