எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்: செருப்பால் அடித்தும், சாணி வீசியும் எதிர்ப்பு

சேலம்: சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர்., ஜெயலலிதா சிலை முன்பு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவினர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பறித்துள்ளார்.

இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்திற்கு வந்தனர். அங்கு இருவரது சிலைக்கும் மாலை அணிவித்து விட்டு, அதிமுகவிற்கு துரோகம் செய்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கட்சிக்கு துரோகம் இழைத்து, அமைச்சர் பதவிக்காக தவெகவிடம் சென்று விட்டார்கள், அவர்கள் அனைவரும் துரோகிகள் என ஆவேசமாக தெரிவித்தனர்.

இதில், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், சக்திவேல், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நெல்லை: கட்சி கட்டுப்பாட்டை மீறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை கண்டித்து பாளையங்கோட்டை வடபகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் மார்க்கெட் அருகே அவர்களின் உருவ படத்தை செருப்பு மற்றும் வாரியலால் அடித்தும், சாணம் ஊற்றியும் அவமதிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகக் கோரி கோஷமிட்டனர். போலீசார் விரைந்து வந்து அதிமுவினர் அவமதிப்பு செய்த படங்களை பறிமுதல் செய்தனர். அப்போது அதிலிருந்த சாணம் அருகில் இருந்தவர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: