சென்னை: நிதியமைச்சரே நியமிக்காத நிலையில், நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றுள்ளது. அரசின் பொருளாதார நிலைமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் கடன் மேலாண்மை போன்ற மிக முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் போது, அதற்கான பொறுப்பில் இருக்கும் அமைச்சரின் பங்கேற்பு அவசியமானது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டு நடத்தப்படும் ஆலோசனைகள் நிர்வாக ரீதியாக தேவையானதாக இருந்தாலும், அரசியல் மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளில் அமைச்சரின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நிதியமைச்சர் இல்லாதது அரசின் உள்துறை ஒருங்கிணைப்பில் கேள்விகளை எழுப்புவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
