தூத்துக்குடி, மே 14: தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு, பூ மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். தூத்துக்குடி மாநகராட்சிட்குட்பட்ட ஜெயராஜ் ரோடு, பூ மார்க்கெட் பகுதிகளில் பலர் சாலையை ஆக்கிரமித்து இருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்தன. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஜெயராஜ் ரோடு, பூ மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 82 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பலர் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து மீண்டும், இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பூ மார்க்கெட் பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
