×

அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 14: கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்(ம) 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வித தயக்கம் இன்றி, முக அங்கீகார அமைப்பு முறையில் தங்களை அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்(ம) 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அதில், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் (ம) 6மாதம் முதல் 2வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோருக்கு முக அங்கீகார அமைப்பு பதிவிட்ட பின்னர் மாதந்தோறும் சத்து மாவு வழங்கிடவும், 6 மாத வரையிலான குழந்தைகள்(ம) 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு முறை மட்டும் முக அங்கீகார அமைப்பு பதிவிட்டு பயன்கள் வழங்கிடவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், முக அங்கீகார அமைப்பு வாயிலாக போஷான் டிராக்கர் செயலியில் பதிவிட பயனாளிகள்(ம) பயனாளி குழந்தைகளின் பெற்றோர்களால் தயக்கம் காட்டப்படுகிறது. அதேபோன்று, முக அங்கீகார அமைப்பு பதிவிடுவதற்கு ஆதார், செல் எண் விவரங்கள் அளிப்பதிலும் தயக்கம் காட்டப்படுகிறது.

எனவே, எவ்வித தயக்கமின்றி முக அங்கீகார அமைப்பு முறையில் தங்களை அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்து, அங்கன்வாடி மையத்தால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் பெறலாம். மேலும், பெற்றோர்கள் தங்களது 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை தவறாது அங்கன்வாடி மையங்களில் சேர்த்து, குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வியினை கற்பித்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Anganwadi centres ,Sivaganga ,
× RELATED கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்