விருதுநகர், மே 14: விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலை சிவகாசி சர்வீஸ் சாலையில் கோழி கழிவுகள் தொடர்ந்து கொட்டுவதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே எச்சரிக்கையை மீறி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் சிவகாசி நான்கு வழிச்சாலை சர்வீஸ் சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் கார், டூவீலர் உட்பட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அந்த சாலையில் பொதுமக்களும் நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் தொடர்ந்து கோழி இறைச்சி கழிவுகள், நகர் பகுதியிலிருந்து கொட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியாக டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தை மூடிக்கொண்டு செல்கின்றனர். அதேபோல் கோழி கழிவுகளால் அந்த சாலையில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்தப் பகுதியில் எச்சரிக்களை மீறி கோழி கழிவுகள் கொட்டும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
