×

மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி தவெக நிர்வாகி தகராறு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு ஆட்சி மாறிவிட்டது, முதல்வர் யார் தெரியுமா?

திருவண்ணாமலை, மே 8: திருவண்ணாமலையில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் சாலையோர மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை தவெக நிர்வாகி தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாநராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட பேகோபுரம் 3வது தெருவில், மாநகராட்சி சார்பில் சாலையோர மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை மலையடிவாரத்தில் உள்ள இந்த தெருக்களில் மழை நீர் வடிந்து செல்ல வசதியாக ஏற்கனவே இப்பணிகள் தொடங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக இடையே பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், வழக்கம் போல ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் நேற்று தொடர்ந்து நடந்தன. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த தவெக நகர நிர்வாகி அஜீத்(30) என்பவர், கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

மேலும், ஆட்சி மாறிவிட்டது விஜய் முதல்வராகிவிட்டார். எனவே, மாநகராட்சி கவுன்சிலர் இந்த பணியை செய்யக்கூடாது என ஜேசிபி இயந்திரத்தின் முன்பு நின்று தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த 14வது வார்டு மாநகராட்சி திமுக கவுன்சிலர் மெட்ராஸ் சுப்பிரமணி, நம்முடைய பகுதிக்கு மாநகராட்சி சார்பில் நடைபெறும் நன்மையை தடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனாலும், டிவிகே ஆட்சிக்கு வந்துவிட்டது, முதலமைச்சர் யாருனு தெரியுமா? மாநகராட்சி வேலை செய்யக் கூடாது என அஜீத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு, தவெக நிர்வாகி அஜீத்தை கண்டித்துள்ளனர். அதன்பிறகு, அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பான்மை இழுபறியால் இன்னும் ஆட்சியே அமையாத நிலையில், அதற்குள் மாநகராட்சி வேலைகளை தடுத்து நிறுத்தி தகராறில் தவெகவினர் ஈடுபடுவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Thaveka ,Minister ,Tiruvannamalai ,Begopuram ,Tiruvannamalai Municipal Corporation… ,
× RELATED திருவண்ணாமலை மாநகராட்சி நகர்புற...