×

வேலூர் – திருவண்ணாமலை சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் படுகாயம்: 2 செல் போன் மாயம்: ரூ.5 லட்சம் மீட்பு

 

கண்ணமங்கலம், மே 19: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(45). திருச்சியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மனைவி லட்சுமி (35). ஒரு மகள். ஆந்திர மாநிலத்தில் வசித்த லட்சுமியின் தந்தை சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே வெங்கட்ராமன் குடும்பத்துடன் காரில் ஆந்திரா சென்று, மாமனார் இறுதிச் சடங்கை முடித்து விட்டு, நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் காரில் வேலூர் வழியே திருச்சி நோக்கி சென்றார். வேலூர் அடுத்த அரியூரைச் சேர்ந்த குமார்(55) தனது காரில் போளூர் சென்று, தனது தாய் பஞ்சவர்ணத்தை காரில் அழைத்துக் கொண்டு, ஆரியூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தார்.

வேலூர் – திருவண்ணாமலை சாலையில் அய்யம்பாளையம் காந்திநகர் பகுதியில் கார்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் இரு கார்களும் பழுதானது. கார்களில் பயணித்த குமார், பஞ்சவர்ணம், லட்சுமி, வெங்கட்ராமன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். லட்சுமி மகள் சிராய்ப்புடன் தப்பினார். விபத்து பகுதியில் கூடிய மக்கள் இது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர், பெண் பணியாளர் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். வெங்கட்ராமன் காரில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கண்ணமங்கலம் போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையான செயலுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், வெங்கட்ராமன் காரில் இருந்த 2 செல்போன்கள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கண்ணமங்கலம் போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vellore-Thiruvannamalai road ,Kannamangalam ,Venkatraman ,Arakkonam ,Ranipet district ,Trichy ,Lakshmi ,Andhra Pradesh ,
× RELATED திருவண்ணாமலை மாநகராட்சி நகர்புற...