×

துணை தாசில்தாரை தாக்கிய அதிமுக நிர்வாகி: கைது செய்யக்கோரி வருவாய்துறையினர் போராட்டம்

 

தண்டராம்பட்டு, மே 22: இடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இல்லை என்ற தகராறில், துணை தாசில்தாரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி மனோன்மணி, அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவருக்கு சொந்தமான பட்டா இடம் மோத்தக்கல் ஊராட்சியில் உள்ளது. அந்த இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, நேற்று முன்தினம் மனோன்மணி மற்றும் உறவினரான அதிமுக நிர்வாகி குமார் ஆகிய இருவரும் தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தேன்மொழி துணை தாசில்தார் மணவாளன் ஆகியோரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு, உங்கள் மனுவுக்கு பதில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டேன் என்று துணை தாசில்தார் கூறினாராம். இதனால், அதிமுக நிர்வாகி குமாருக்கும், துணை தாசில்தாருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானதாம். வெளியே வந்த குமார் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உடலில் தண்ணீர் ஊற்றி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே, நேற்று காலை தமிழ்நாடு வருவாய்த்துறை மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பாக துணைதாசில்தாரை தாக்கிய குமாரை கைது செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தாசில்தார் தேன்மொழி மண்டல துணை தாசில்தார் குமார், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலராக உதவியாளர்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் மாலை கலைந்து சென்றனர்.

 

Tags : AIADMK ,Revenue ,Thandarambattu ,Venkatesan ,Rayandapuram ,Tiruvannamalai district… ,
× RELATED திருவண்ணாமலை மாநகராட்சி நகர்புற...