சேலம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாமக ராமதாஸ் அணியில் சேலம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த அருள் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அதிமுக கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு) வேட்பாளராக கார்த்தி, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் லட்சுமணன் களம் கண்டனர். இதில், தவெக வேட்பாளர் லட்சுமணன் வெற்றி பெற்றார். அருள் 12,391 வாக்குகளை மட்டுமே பெற்று, 4வது இடம் பிடித்தார்.
சேலம் மேற்கு தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், தனது சொந்த வேலைக்கு மாஜி எம்எல்ஏ அருள் திரும்பியுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது பேஸ்புக் சமூகவலைதள பக்கத்தில் மாடு, குதிரை, கழுதை ஆகியவைகளுடன் இருக்கும் 4 புகைப்படங்களுடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‘’நம்ம வேலைய பாக்க நம்ம தோட்டத்தில் மாடு, எருமை, குதிரை, புதிதாக பிறந்த கழுதை… மேய்க்கும் பணியில் நா ரொம்ப பிஸி,’’ எனக்கூறியுள்ளார். இத்தகவல், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
