2 குட்டிகளுடன் கரடி உலா: தொழிலாளர்கள் பீதி

 

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையோர தேயிலை தோட்டத்தில் பகல் நேரங்களில் 2 குட்டிகளுடன் கரடி உலா வருகிறது. இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வனப் பகுதிகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சமீப காலமாக உணவு தேடி கரடிகள் தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புகள், சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளை தோளில் சுமந்தவாறு பகல் நேரத்தில் கரடி உலா வந்துள்ளது. இதனை பார்த்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உடனே தேயிலை தோட்டத்தைவிட்டு வெளியேறினர். மேலும் பகல் நேரங்களில் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: