கோத்தகிரி, மே 7: கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் மழைநீர் வடிநீர் கால்வாயில் விழுந்த வளர்ப்பு நாயை கிராம நிர்வாக அலுவலர்கள் மீட்டனர்.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் எண்ணற்ற பொதுமக்கள் இங்கு வந்து செல்வர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தாசில்தார் அலுவலக வளாகத்தில் உலாவந்த வளர்ப்பு நாய் எதிர்பாராதவிதமாக மழைநீர் கால்வாயில் தவறி விழுந்தது.
நாய் வெளியே வர சிரமப்பட்டது.இதனை பார்த்த தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பேரிகார்டுகளை வைத்து வளர்ப்பு நாய் வெளியே வர உதவினர். பின்னர் மழைநீர் கால்வாயில் விழுந்த வளர்ப்பு நாய் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலர்களை பாராட்டினர்.
