ஊட்டி, மே 5: ஊட்டியில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவுக்கார வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சகோதரிகள் இருவரும் திருமணமாகி தங்கள் கணவருடன் வசித்து வருகின்றனர். இரண்டு சகோதரிகளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சகோதரிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் கூட்டு குடும்பமாக உள்ள அவர்களுடைய தாயார் வீட்டில், குழந்தைகளை அனுப்பி இருந்தனர்.
அதில் ஒரு குழந்தைக்கு 7 வயதும் மற்றொரு குழந்தைக்கு 8 வயதும் ஆகிறது. பாட்டி வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் அவ்வப்போது பக்கத்து வீடுகளுக்கு சென்று விளையாடுவது வழக்கம். இந்நிலையில், பாட்டி வீட்டுக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க உறவுக்கார நபர் ஒருவர் சிறுமிகளிடம் விளையாடி வந்துள்ளார். அந்த வாலிபருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. உறவினர் என்பதால் யாரும் தவறாக நினைக்கவில்லை.
சிறுமிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் இருவரும் பாலியல் தொந்தரவிற்கு ஆளானது தெரியவந்தது. இது குறித்து சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில் வீட்டுக்கு வந்த உறவுக்கார நபர் வீட்டில் ஆட்கள் இருந்தபோதே மற்றொரு அறையில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும், வெளியில் கூறக்கூடாது என சிறுமிகளை மிரட்டியதும் தெரிய வந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஊட்டி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி நிஷா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள நபரிடம் வழங்கப்பட்டது.
