திருவனந்தபுரம், மே 7: திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு திடீரென பின்னோக்கி சென்றதால் தடுமாறி விழுந்து 2 பெண் பயணிகள் காயமடைந்தனர்.
திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் உள்ள 5 நடை மேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இங்கு 5வது நடைமேடைக்கு வந்தது. இதில், வந்த பயணிகள் நகரும் படிக்கட்டில் ஏறி மேல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென படிக்கட்டு பின்னோக்கி நகர்ந்தது. இதனால், சில பயணிகள் தடுமாறி கீழே விழுந்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அவசர பட்டனை அழுத்தி நகரும் படிக்கட்டு இயங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தன்யா, அம்பிளி ஆகிய 2 பெண் பயணிகள் காயமடைந்தனர்.
இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
