மேட்டுப்பாளையம், மே 7: மேட்டுப்பாளையம் நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் – கோவை சாலையில் கம்யூனிஸ்ட் அலுவலகம் எதிரே வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் முன்பு நேற்று ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்காக தனியாருக்கு சொந்தமான கார் ஒன்றும் மோட்டார் பைக் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, அதன் அருகே இருந்த வேப்ப மரத்தின் ராட்சத கிளை திடீரென முறிந்து கார் மற்றும் மோட்டார் பைக் மீது விழுந்தது. இதில் கார் மற்றும் மோட்டார் பைக் பலத்த சேதமடைந்தது. மரம் முறியும் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் – கோவை சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
