ஈரோடு,ஏப்.25:ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோடை கால பயிற்சி வகுப்பு தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்டம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் வஉசி விளையாட்டு மைதானத்தில் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கியது. இதில், தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, இறகுப்பந்து மற்றும் கபடி விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், கபடி உள் விளையாட்டரங்கிலும், ஜிம்னாஸ்டிக் கோபி கிருஷ்ணா நகர் விளையாட்டரங்கிலும் நடைபெறுகிறது. இதில், 135 மாணவர்கள், 125 மாணவிகள் என மொத்தம் 260 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சியானது வருகிற மே 1ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் தெரிவித்தார்.
