வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் தடை செய்ய பொதுமக்கள் கோரிக்கை ஆற்காடு பகுதியில் விதிமுறைகளை மீறி

 

ஆற்காடு, மே 7: ஆற்காடு பகுதியில் வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு தொல்லை தரும் ஏர் ஹாரன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆற்காடு உள்ளது. விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், வியாபாரிகள் பொருட்களை வாங்கி செல்வதற்கும் பிரதான நகரமான ஆற்காடு வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்களும் ஆற்காடு வழியாக வந்து செல்கின்றனர்.

அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஆற்காடு வழியாக வந்து செல்கின்றன. அதேபோல் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் ஆற்காடு வழியாக வேலூர், ஆரணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றன. இதனால் ஆற்காட்டில் உள்ள பிரதான சாலைகளான வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை, ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் சாலை, கலவை சாலை ஆகியவற்றில் அதிக அளவு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்கின்றன.

மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களை ஏற்றி செல்ல வரும் வாகனங்கள் என பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. பள்ளி கல்லூரிகளுக்கு அருகேயும், மருத்துவமனை பகுதிகளிலும் எந்த விதமான ஹாரனை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிவுறுத்தலை காற்றில் பறக்க விட்டு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை விதிமுறைகளுக்கு மாறாக பல வாகனங்களில் பொருத்தி பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சில இரண்டு சக்கர வாகனங்களில் நாய்கள் குறைப்பது போல், குழந்தை அழுவது போல், பயங்கர சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.

காதுகளை செவிடாக்கும் வகையில் உள்ள அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஒரு சில டிரைவர்கள் தொடர்ந்து ஏர் ஹாரனை அடித்தபடி செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், நடந்து செல்லும் பொதுமக்கள்,மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளிகள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் மன உளைச்சல் ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே விதிமுறைகளை மீறி அனைத்து வாகனங்களிலும் பொருத்தி உள்ள ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாக்ஸ்….
ஏர் ஹாரன்களால் பாதிப்பு என்ன?

தமிழ்நாட்டில் வாகனங்களில் அதிக சத்தத்தை உண்டாக்கும் ஏர் ஹாரன்கள், அதிக சத்தமிடும் இசை ஹாரன்கள் மற்றும் பிரஷர் ஹாரன்களை பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். பொதுவாக ஹாரன் சத்தம் 100 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அது சட்டவிரோதமானது. அபராதம் அல்லது பறிமுதல் செய்யப்படலாம். அதையும் மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவது விதிமீறல் ஆகும். இதனால் பொதுமக்களின் செவித்திறன் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி பல வாகனங்களில் 150 டெசிபல் அளவிற்கு மேலாக ஏர் ஹாரனை பொருத்தி பயன்படுத்துகின்றனர். சராசரி மனிதனின் கேட்கும் திறன் அளவு மேல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் உறக்கமின்மை ஏற்பட்டு உடல்நலம், மனநலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்களில் சிசுவின் நரம்பு மண்டலம் பாதித்து சிசு உருச்சிதைவு ஏற்படும் நிலை உருவாகும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories: