சோளிங்கர், மே 7: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரமோற்சவம் நிறைவடைந்தது. இதையொட்டி கண்ணாடி பல்லக்கில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் உற்சவர் பக்தோசித பெருமாள் வீதியுலா வந்து அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து தக்கான் குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், பெரியமலையில் கொடி இறக்கமும் நடைபெற்றது. இதையடுத்து மூன்று நாள் விடையாற்றி உற்சவமும் நடைபெற்றது. பிரமோற்சவத்தின் நிறைவாக கண்ணாடி பல்லக்கு உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கேப்சன்….
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரமோற்சவத்தின் நிறைவாக கண்ணாடி பல்லக்கில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்த்தோசிதப்பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
