கோடை உழவால் மண்ணின் ஈரப்பதம், மகசூல் அதிகரிக்கும் வேளாண் இணை இயக்குனர் தகவல்

வேலூர், மே 6: கோடை உழவால் மண்ணின் ஈரப்பதம், மகசூல் அதிகரிக்கும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. மரங்கள், செடிகள் கருகி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை மாதங்களான சித்திரை, வைகாசி (மார்ச்-மே) மாதங்களில் பெய்யும் மழையை கொண்டு, தரிசு நிலங்களை உழுது, மழை நீரை மண்ணில் நிறுத்தி, மண் அரிப்பை தடுத்து, ஈரப்பதத்தை தக்கவைக்கலாம். மேலும் பூச்சி நோய் கிருமிகளின் முட்டைகளை வெப்பத்தால் அழித்து களைகளை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.

தை மாத அறுவடைக்கு பிறகு மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரை நிலம் உழவு செய்யாமலே தரிசாக கிடக்கும். மேல் மண் இருக்கமாக இருக்கும். அறுவடைக்கு பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு வாய்ப்பின்றி இருக்கும். தை மாத அறுவடையின்போது இலைச் சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும். மேல் மண் இறுக்கமாக இருப்பதால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் வெளி ஏறி மண் அரிப்பு உண்டாக்கும். முந்தைய பயிரின் வேர்கள் கரையான் தாக்குதலுக்குட்பட்டு பலனின்றி விரயமாகும்.

கோடை மழையை பயன்படுத்தி சித்திரை மாதத்தில் உழவு செய்து பயிர் சாகுபடி செய்தால் தங்கத்திற்கு சமமான பலனை தரும் என்பது விவசாயிகளின் அனுபவமாகும். தை மாதத்தில் மானாவாரி பயிர்கள் அறுவடை செய்தவுடன் மண் ஈரப்பதத்துடன் இருக்கும்போது சட்டி கலப்பை கொண்டு நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதால் மழைநீர் மண்ணுக்குள் இறங்கி ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.

பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும். சரிவுக்கு குறுக்கே உழுவதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. ஆழமாக உழுவதால் மண்ணில் உறங்கும் நிலையில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டு புழுக்கள், பூஞ்சான் கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு வெப்பம் மற்றும் பறவைகளால் அழிக்கப்படுகின்றன. மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றது, மண் வளம் செழிக்கின்றது.

மண்ணில் உள்ள சத்துக்கள் விரயமாவது தடுக்கப்படுகிறது. மண்ணின் மேல் உள்ள இலை சருகுகள், குச்சிகள் மக்குவதால், மண்ணின் கரிமச்சத்து கூடுகிறது. மண் இறுக்கம் தளர்ந்து காற்றோட்டம் கூடுவதால் அடுத்தடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களின் வேர்கள் நன்கு வளரும். மழைநீர் எளிதில் மண்ணில் ஊடுருவி நிலத்தடி நீரை உயர்த்துகிறது. மண்ணின் நீர் பிடிப்பு திறன் கூடுகிறது. இவ்வாறு கோடை உழவு செய்வதால் அடுத்தடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு அடித்தளமாக இருந்து பல நன்மைகளை உண்டாக்கி மகசூலை அதிகரித்து நல்ல பலனை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: