கோடைகால யோகா பயிற்சி

மதுரை, மே 6: மதுரை காந்தி மியூசியத்தில் அமைதி, ஆரோக்கியத்திற்கான ஒரு மாத கால கோடைகால யோகா பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்து பேசும்போது, மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ யோகாவை அனைவரும் கற்க வேண்டும் என்றார். மியூசியத்தின் யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

யோகா பயிற்சியை தொடங்கி வைத்து, ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவசுப்பிரமணியன் பேசும்போது, ‘இந்தியப் பண்பாட்டின் ஓர் அங்கமாக யோகா இருக்கிறது. எவ்வித வேறுபாடும் இன்றி, உலக மக்கள் அனைவரும் யோகா கற்கின்றனர். நோயின்றி நீண்ட நாள் வாழ இது பெரிதும் உதவும்’ என்றார். யோகா மைய நிர்வாகிகள் தாரணி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். முன்னதாக மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். மாணவி சுஜிதா நன்றி கூறினார். காந்திமியூசிய பணியாளர் பாண்டி செல்வம் மற்றும் மாணவ -மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: