கிராம நத்தம் நிலங்களை எவரும் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 6: கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உள்ள கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடையை அப்புறப்படுத்துவது தொடர்பான நோட்டீசை எதிர்த்து கடை உரிமையாளர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.சுரேந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவா, உரிமை கோரவோ முடியாது. இதை அனுமதித்தால் அது சட்டமற்ற நிலையை உருவாக்கிவிடும்.

வருவாய் துறை உத்தரவுகளின்படி நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டவும், பொது பயன்பாடுகளுக்காகவும் ஒதுக்க வேண்டிய கிராம நத்தம் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. கிராம நத்தம் நிலங்கள் என்பது பேராசை பிடித்தவர்கள், ஆள்பலம், அரசியல் பலம் கொண்டவர்கள் ஆக்கிரமிப்பதற்கானது அல்ல என்று உத்தரவிட்டனர்.

Related Stories: