150 ஏக்கர் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது 100 ஏக்கர் ெநல், பயிர்கள் சேதம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது

கண்ணமங்கலம், மே 6: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், அதனுடன் வீசும் பலத்த சூறாவளி காற்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கும் முன்பே வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழையின் வேகம் ஒருபுறம் இருக்க, கண் இமைக்கும் நேரத்தில் வீசிய பயங்கரமான சூறாவளி காற்று ஒட்டுமொத்தப் பகுதியையும் புரட்டிப் போட்டது. இந்த சூறாவளி காற்றின் வேகம் தாங்க முடியாமல் படவேடு, புஷ்பகிரி, வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம், கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், ஏலக்கி, கற்பூரவல்லி மற்றும் செவ்வாழை ரக வாழை மரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் தற்போது முறிந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வாழை மரங்கள் சேதமடைந்த தகவல் அறிந்ததும், மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் பா. லோகேஷ் தலைமையில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அவர்கள் புஷ்பகிரி, வாழியூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தில் முறிந்து கிடக்கும் வாழை மரங்களைப் பார்வையிட்டு, சேத விபரங்களை விரிவாகக் கணக்கெடுத்தனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகையில்,‘ ஒரே ஒரு மணி நேரக் காற்றால் விளை நிலததில் எங்கள் மொத்த உழைப்பும் மண்ணோடு மண்ணாகிவிட்டது’ எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர். ஆய்வின் அறிக்கை விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது குறித்த மேலும் விவரங்களுக்கு போளூர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அதிலும் ஒருசில பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், மக்காச்சோளம், கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது.

மழையால் நெல் பயிர்கள் விவசாய நிலத்தில் முழுவதும் சாய்ந்தும், நெல் பயிர்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கீழ்பன்னாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்களில் இருந்து நெல் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விவசாய பயிர் சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து இதற்கு முறையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: