துறையூர், மே 6: துறையூர் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள ஒக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(73). எலக்ட்ரீசியன். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒட்டம்பட்டிக்கு சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
வேலை முடித்து விட்டு இரவு மீண்டும் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது தம்மம்பட்டி – துறையூர் சாலையில் ஒக்கரை காடோடி வயல் அருகே முதியவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த உப்பிலியபுரம் அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் வசந்த் (26) என்பவர் முதியவர் மீது மோதியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
முதியவரின் சடலம் உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தகவலறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி வசந்த் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெறுகிறார்.
