நாகர்கோவில், மே 6: குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, எஸ்.பி. ஸ்டாலின் கூறினார்.
குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 15ம்தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதை தொடர்ந்து காவல்துறை சார்பிலும் ரோந்து படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. எஸ்.பி. அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து, பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் 23ம்தேதி வாக்குப்பதிவு அன்று, மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது. பின்னர் வாக்கு எண்ணிக்கை மையத்தில், 10 நாட்களுக்கு மேல் பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று முன் தினம் (4ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நாளில் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திலும் போலீசார் நள்ளிரவு வரை இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக முடிவடைந்தது.
இது குறித்து எஸ்.பி. ஸ்டாலின் கூறுகையில், நாட்டின் ஜனநாயக திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாளில் போலீஸ் அதிகாரிகள், போலீசார், துணை ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் பாராட்டுக் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
