நெல்லை, மே 5: பத்தமடை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் மேலச்செவல் வாணியங்குளம் பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். ஏப்.14ம் தேதி பண்ணைக்கு செல்லும் 15 மீ கேபிள் வயரையும், அருகில் கொம்பன் என்பவரின் வாழைத் தோட்டத்திலும் 15 மீ வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கோபாலசமுத்திரம் சுப்பிரமணியபுரம் விவசாய சங்க தலைவரது தோட்டத்தில் ஏப்.18ம் தேதி இரவு 25மீ வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். வயர் திருடப்பட்டதால் உளுந்து பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயி செல்லபாண்டி தவித்தார். இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேலச்செவல் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். பின்னர் எஸ்ஐ வள்ளிநாயகம், திருட்டு சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார். இதில் சேரன்மகாதேவி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ராஜு மகன் இசக்கிபாண்டி (23) என்பவர் வயர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர். இவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
