கோவை, மே 8: கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், வடவள்ளி, ஆழியாறு ஆகிய கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று முதல் வருகிற 10ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, மேட்டுப்பாளையம், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பவானி தடுப்பணைகளில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தின் சார்பில், கதவணை மற்றும் இயந்திரங்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு குடிநீர் விரைவாக வழங்கும் வகையில், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். உடன் தலைமை பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பட்டன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராம்சங்கர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

