இன்று டாஸ்மாக் விடுமுறை மது விற்ற 2 பேர் கைது

திண்டுக்கல் / நத்தம், மே 4: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள், எப்எல் 1, எப்எல் 2, எப்எல் 3, எப்எல்3 (ஏ), எப்எல் 3 (ஏஏ) மற்றும் எப்எல் 11 ஆகிய உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

விதி மீறி மது விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, நத்தம் அருகே பன்னியாமலை பகுதியில் அதே ஊரைச்சேர்ந்த பிரேம் (40) செந்துறை அருகே கோட்டைப்பட்டியில் பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த சந்திரலேகா (41) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதனை உறுதி செய்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், எஸ்ஐ மலைச்சாமி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்ததுடன், 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: