அவதூறு வழக்கு ராகுல் காந்தியின் குரல் மாதிரியை கோரிய மனுவை உபி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சுல்தான்பூர்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் குரல் மாதிரியைக் கோரிய மனுவை உபி. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி எம்பி பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி உபியை சேர்ந்த பாஜ தலைவரான விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஐந்து வருட சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 2023ல் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து 2024 பிப்ரவரியில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே, ராகுல் காந்தியின் குரல் மாதிரியை கோரி விஜய் மிஸ்ராவின் வழக்கறிஞர் சந்தோஷ் பாண்டே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஒரு ஆடியோ கிளிப்புடன் ஒப்பிடுவதற்காக தடயவியல் சோதனைக்காக ராகுல் காந்தியின் குரல் மாதிரி கோரப்பட்டது. இதை நீதிபதி நேற்று மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: