மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு

இம்பால்: மணிப்பூரில் தற்போது மெய்டீஸ் இனத்தை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மொய்ராங் ட்ராங்லாபி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த ஏப்ரல் 7ம் தேதி மர்ம நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுவனும், அவரது சகோதரியும்(6 மாத குழந்தை) கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில் டாங்குல் நாகா இனத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் உக்ருல் மாவட்டம் முல்லம் மற்றும் ஷோங்பெல் கிராமங்களுக்கிடையே உள்ள பகுதியில் கடந்த 24ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆயுதமேந்திய இரண்டு குழுக்கள் பயங்கரமாக மோதி கொண்டன. அப்போது அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ருல் மாவட்டத்தில் மட்டும் தொடர் வன்முறை பதற்றம் அதிகரித்துள்ளதால் அமைதியை நிலைநிறுத்தவும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று உக்ருல் மாவட்டம் லிட்டன் காவல்நிலைய பகுதியில் உள்ள மோங்கோட் செபு, ஷோங்பெல், முல்லம், சிராராகோங் மற்றும் ரிங்கு ஆகிய மலை கிராமங்களில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த மலை கிராமங்களில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும், துப்பாக்கி, வெடிக்காத தோட்டா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல் தங்நவுபால் மாவட்டத்தின் மோரே காவல் நிலைய பகுதியில் உள்ள டி போங்மோல் கிராமத்தில் 18 கண்ணி வெடிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

Related Stories: