புதுடெல்லி: கச்சா எண்ணெயுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை உயர்வால் சோப்பு, ஷாம்பு, சலவைத்தூள் விலை உயர்கிறது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்.பி.ஜி. விநியோக தடைகள் மற்றும் தாமதங்களால் ஏற்பட்ட கடும் பாதிப்பை ஏற்கனவே சந்தித்து வருகிறது. எல்பிஜி பற்றாக்குறை இல்லை என்று அரசு கூறிவந்தாலும், களத்தில் ஏற்படும் தாமதங்கள், நீண்ட காத்திருப்பு காலங்கள் மற்றும் விநியோகங்களில் நெருக்கடிகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடும் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக நுகர்பொருள் நிறுவனங்கள் தயாரிப்புகளின் விலையிலும், எடையிலும் மாற்றம் செய்து வருவதுடன், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை சமாளிக்கும் வகையில், நுகர்பொருள் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க தயாராகி வருகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களால் ஏற்பட்ட இடையூறுகளால் செலவு 8-10 சதவீத அளவு அதிகரித்ததை தொடர்ந்து, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஏற்கனவே தனது தயாரிப்பு பொருள்கள் அனைத்திலும் 2-5 சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது. நுகர்பொருள் நிறுவனங்கள் குறைந்த விலையிலான சிறிய பாக்கெட்டுகளின் எடையை குறைக்கும் அதே வேளையில், பெரிய அளவிலான பேக்குகளின் விலையை உயர்த்தும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் சோப்பு, ஷாம்பு, சலவைத்தூள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
