வணிக சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயருகிறது: வீட்டு சிலிண்டர் விலையும் அதிகரிக்க வாய்ப்பு: தேர்தல் முடிவு வெளியான பின் அறிவிக்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை தொடர்ந்து, 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் மாதம் தோறும் காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த இரு மாதங்களாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்காசியாவில் போர் துவங்கியது முதல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144ம், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், மே 1ம் தேதியான நேற்று முன் தினம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.993 அதிகரித்து ரூ.3,239க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற பேச்சு வலுவாக எழுந்தது. இதுபற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், ‘5 மாநில தேர்தலை மனதில் வைத்தே, எரிபொருட்களின் விலையை ஒன்றிய அரசு உயர்த்தவில்லை’ என விமர்சித்திருந்தார். ஆனால், தற்போதைக்கு விலை உயர்வு இருக்காது என ஒன்றிய அரசு தரப்பில் திட்ட வட்டமாக கூறியபோதிலும், நேற்று முன்தினம் திடீரென வணிக காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே தொழிற்சாலைகள், மால்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்தும் ‘பல்க் டீசல்’ விலை லிட்டருக்கு ரூ.137-லிருந்து ரூ.149-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சமையல் காஸ் சிலிண்டர் விலை 40-50 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், 4 ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல், டீசலின் விலை முதல் முறையாக உயரும்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘மேற்காசியா போர் பதற்றத்தால், சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. தற்போது தேர்தல் மற்றும் இதர சூழல்களால் விலை உயர்த்தப்படாமல் இருந்தாலும், வரும் நாட்களில் சர்வதேச சூழலை பொறுத்து விலை உயர்த்தப்படலாம். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்’ என்றனர்.

* வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.993 அதிகரிக்கப்பட்டு ரூ.3,239 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

* வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட உள்ளது.

* தொழிற்சாலை, மால், போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்க் டீசல் விலை லிட்டர் ரூ.137ல் இருந்து ரூ.149 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்பட்ட பிறகு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 அல்லது ரூ.5 வரை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

* இதற்கான ஒன்றிய அரசின் அறிவிப்புகள் 5 அல்லது 7 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022 ஏப்ரலில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் குறைக்கப்படவில்லை.

Related Stories: