ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜவில் சேர்ந்த மாநிலங்களவை எம்பி பதக் மீது 2 வழக்குகள் பதிவு

சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ராகவ் சதா தலைமையில் 7 மாநிலங்களவை எம்பிக்கள் கடந்த மாதம் 24ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். இது ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில், கட்சி மாறிய 7 எம்பிக்களில் ஒருவரான சந்தீப் பதக் மீது பஞ்சாப் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இது பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. எப்ஐஆர் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே சந்தீப் பதக் மீதான வழக்கு பதிவுக்கு பாஜ கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி அளித்த பேட்டியில், ‘‘பஞ்சாப் காவல்துறை பதக்கின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்த முயன்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத பஞ்சாப் போலீசார் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறார்களா? பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறையை அரசு தவறாக பயன்படுத்துகிறது. ஆம் ஆத்மி அரசு நிர்வாகத்தை முறையாக கொண்டு செல்வதில் தோல்வி அடைந்து விட்டது’’ என்றார்.

Related Stories: