சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பது நாளை மதியம் தெரிந்து விடும். வாக்கு எண்ணிக்கையையொட்டி மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் வருகிற 10ம் தேதியுடன் முடிகிறது.
இதையொட்டி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். இந்த தேர்தலில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்துள்ளனர். இது 85.10 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும், 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மற்றும் கட்சி முகவர்கள் கண்காணிப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு 62 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அதிகாலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும். ஏற்கனவே வாக்கு எண்ணும் மையத்துக்கு அதிகாரிகள், அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் செல்வதற்கு தனித்தனியாக தடுப்புகள் அமைத்து வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அந்த வழியாக வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரித்த நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் மட்டும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இதில் வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் நாளை காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான கட்டிடத்தில் ஆஜராக வேண்டும்.
வாக்கு எண்ணும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை தவறாமல் அணிந்து வர வேண்டும் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக, அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகிறது. ஒவ்வொரு மேஜைகளிலும் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும்.
ஒவ்வொரு தொகுதியிலும் எந்த வேட்பாளர் முன்னணியில் உள்ளார் என்ற விவரம் காலை 9 மணி முதல் தெரியவரும். இயந்திரங்களில் பதிவான வாக்குகள் குறைந்தபட்சம் 14 மேஜைகளில் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜைக்கு ஒரு நுண் பார்வையாளர் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்களும், 2வது மற்றும் 3 அடுக்கில் மாநில போலீசாரும், 4வது அடுக்கில் (நுழைவாயிலில்) உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு இருப்பார்கள்.
அதன்படி பாதுகாப்பு பணியில் மட்டும் துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் என சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையை பொறுத்தவரை 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம்,
எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகிறது.
இந்த 3 மையங்களிலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு மையத்திலும் இணை ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் 3 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காலை 6 மணிக்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு போலீசார் சென்று விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்துக்கு டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், மையங்கள் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னரே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது நாளை மதியம் தெரிந்து விடும். தமிழக முதல்வராக யார் பதவியேற்க போகிறார்கள் என்ற பரபரப்பு இப்போதே மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
