×

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒதுக்கீடு செய்வதில்லையென வழக்கு: ஒன்றிய அரசு ஆணையருக்கு நோட்டீஸ்

மதுரை: சிவகங்கையை சேர்ந்த அருள்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2026-27ம் கல்வியாண்டிற்கான எல்கேஜி வகுப்பில் எனது மகனை சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன். ஒன்றிய அரசு இந்த வருடம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பால்வதிகா 1, பால்வதிகா 2 பால்வதிகா 3 எனப்படும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை துவங்கி உள்ளது.

இந்த வகுப்பில் சேர்வதற்காக இந்த வருட இலவச கட்டாய கல்வி திட்டத்தில் கீழ் விண்ணப்பித்திருந்தேன். பள்ளியால் வெளியிடப்பட்ட தற்காலிகப் பட்டியலில் எனது மகனின் பெயர் 4வது இடத்தில் இருந்தது. ஆனால், இறுதித் தேர்வுப்பட்டியல் வெளியானபோது, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட வேண்டிய 25 சதவீத இடங்கள் பட்டியலில் எனது மகனின் பெயர் இடம்பெறவில்லை. விசாரித்தபோது ப்ரீகேஜி வகுப்பு மாணவர்களுக்கே அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய சலுகைகளை பள்ளி நிர்வாகம் வழங்கத் தவறிவிட்டது. இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஒன்றிய அரசு நிர்வாகத்தின் டெல்லி ஆணையர், சென்னை மண்டல துணை ஆணையர் மற்றும் காரைக்குடி பள்ளி முதல்வர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2க்கு தள்ளி வைத்தார்.

Tags : Kendriya Vidyalaya ,Union Government ,Commissioner ,Madurai ,Sivaganga ,Court ,Kendriya Vidyalaya School ,Karaikudi, Sivaganga ,LKG ,Union… ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!